Wednesday, November 11, 2015

அன்புள்ள அஜித்திற்கு, (வேதாளம் விமர்சனம்)

அன்புள்ள அஜித்திற்கு,

                         உங்களின் அதி-தீவிர இரசிகன் ஒருவன் எழுதிக் கொள்வது.  ஆவி என்பது எனது பெயர். ஆவி என்றெல்லாம் பெயர் இருக்குமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. வேதாளம் என்றே ஒருவருக்கு பெயர் இருக்கும் போது ஆவி என்று இருக்கக் கூடாதா? (தமாசு.. தமாசு..) பொதுவாக, வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் முதல் இரண்டு நாட்களிலேயே பார்த்து விடுவேன். அதுவும் உங்கள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் முதல் காட்சி தான். ஆனால் இந்த வேதாளத்தின் டீசரோ, பாடல்களோ  என்னை ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. பல முறை கேட்டபின் 'ஆலுமா டோலுமா' என்ற அந்த தத்துவப் பாடல் மட்டும் கொஞ்சம் பிடித்தது. சரி படத்திற்கு வருகிறேன்.

                        விக்ரமாதித்தன் வேதாளம் என்ன செய்யும்?  தன்னை மடக்கிப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு செல்லும் விக்ரமனிடம் புதிது புதிதாய் கதை சொல்லும். பின் அவன் தளர்வடையும் நேரம் பார்த்து முருங்கை மரத்தில் ஏறிவிடும். விக்ரமனும் மனம் தளர மாட்டான், வேதாளமும் ஓயாது. படிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதே என்ற சலிப்பு தோன்றவே தோன்றாது. அதுதான்,  அந்த விறுவிறுப்பு தான்  வேதாளக் கதையின் பலம். இந்த 'சிறுத்தை' சிவாவின் வேதாளமும் அந்த விறுவிறுப்பில் கொஞ்சமும் சளைத்ததல்ல.



                        படத்தின் சிறப்பாக நான் கருதுவது உங்கள் சிரிப்பு. முதல் காட்சியில் அப்பாவியாய் சிரித்து ஒரு ரவுடியின் மனதில் இடம் பெறுவதாகட்டும், பின்னர் வில்லனின் முன் நயவஞ்சகமாக சிரிப்பதாகட்டும் எங்களின் 'தல' ஸ்பெஷல் அந்த சிரிப்பு தான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களே விரும்பும் ஒரு பேரழகுச் சிரிப்பு அது. படத்தின் கதை என்னவோ தமிழ் சினிமா எனும் வாஷிங் மெஷினில் துவைத்து , கிழித்து தொங்கவிடப்பட்ட பழிவாங்கும் கதை தான் என்றாலும், சீறிப் பாயும் ஸ்க்ரிப்ட் மற்றும் உங்களின்  அசத்தல் நடிப்பு இரண்டும் தான் படத்தை வித்தியாசப் படுத்திக் காண்பிக்கிறது.

                          இந்தப் படம் சிலருக்கு 'பாட்ஷா' வை நினைவு படுத்தலாம், சிலருக்கு 'ஏய்' படத்தை நினைவு படுத்தலாம். ஏன் சிலருக்கு 'ஜனாவை' கூட நினைவு படுத்தலாம். பழிவாங்கும் கதைகள் எல்லாவற்றுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறல்லவே. ஆனால் படம் பார்க்கும் சினிமா இரசிகன் ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு விஷயத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனக்கு படம் பிடித்ததாய் சொல்லியே நகர்ந்ததைக் கண்டேன். அவர்கள் இரசித்ததை நான் கண்கூடாய்ப் பார்த்த சாட்சியும் ஆனேன்.

                            சுமாராய் வந்திருக்கிறது என்று நான் முதல் பத்தியில் கூறிய ஆலுமா டோலுமாவிற்கு என் முன் சீட்டில் அமர்ந்திருந்த மூன்று வயது சிறுவன் ஆடிய ஆட்டத்தை பற்றி சொல்லவா? இரண்டாம் நாள், இரசிகர்களின் ஆரவாரம் இருக்கும் என்று தெரிந்தும் வந்திருந்த ஒரு வயதான தாய், லக்ஷ்மி மேனனிடம் நீங்கள் அன்பைப் பொழியும் காட்சியில் கண்ணீர் விட்டு தன் சேலைத் தலைப்பால் துடைத்ததை சொல்லவா? இல்லை அந்த பெண்மணியின் கணவர், தம்பி இராமையா இறக்கும் தருவாயில் கூறுவதைக் கேட்டு சிறிது கலங்கி, மற்றவர் பார்த்திடா வண்ணம் முகம் துடைப்பது போல் விழி நீரை அகற்றினாரே அதைக் கூறவா?

                         இசை என்பது இரைச்சலாய்த் தோன்றினாலும் அந்த மெல்லிய தேகம் கொண்டவனை மாஸ்ட்ரோ வுடன் ஒப்பிடாமல் அவன் வயதிற்கு இது சற்று மேலாகவே தோன்றியது. ஆயினும் கொஞ்சம் தேர்ச்சி அவசியமென தோன்றியது. நீங்கள் பெயரிட்ட அப்புவை மன்னிக்கவும் சிவபாலனுக்கு புது கெட்டப் என்ற போதும் பெரிதாய் நடிக்க ஸ்கோப் இல்லையே. சரி நாயகி ஸ்ருதிக்கே அவ்வளவு தான் ஸ்பேஸ் இருந்தது. வெறும் கிளாமர் டால் கதாப்பாத்திரம் என்றே சொல்லலாம் அவருக்கு. ஆனால் லக்ஷ்மி மேனன் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்தி ஒவ்வொரு அண்ணன்களுக்கும் தன் தங்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார்.

                         சரி தல, எந்த ஒரு படத்திலும் எதிரி பவர்புல்லா இருந்தால் தான் படம் மாஸ் ஆக இருக்கும் என்பது சினிமா விதி. எம்ஜியார், சிவாஜி , ரஜினி, கமல் என எல்லோருடைய படங்களும் இப்படித்தானே மக்கள் எதிர்பார்த்தார்கள், இரசித்தார்கள். ஆனால் இதில் வில்லர்கள் எல்லோரும் வருகிறார்கள், ஓரிரு வார்த்தை பேசுகிறார்கள். பின் மடிகிறார்கள். அவ்வளவு கெத்தாக இல்லையே என்று சிலர் கேட்கிறார்கள். முன் சொன்ன நாயகர்கள் ஹீரோ அவதாரத்தோடே வருவார்கள், ஹீரோவாகவே வாழ்வார்கள், வெல்வார்கள். ஆனால் வேதாளம் அப்படியல்ல, அவன் கெட்டவன், பணத்திற்காக எதையும் செய்யும் கேடுகெட்டவன். அவன் நல்லவனாக தேவைப்படும் ஒரு சிறு பொறி கிடைத்ததும் நல்லவனாக அவதாரம் எடுக்கிறீர்கள். ஸோ இதில் வில்லரும், ஹீரோவும் நீரே என்பதை புரியாதவர்களின் பிதற்றலாய்த் தான் நான் அதைப் பார்க்கிறேன்.

                          பெண்கள் வீட்டிற்குள் அடைந்து கிடப்பதற்கு ஒரு சில ஆண்கள் தான் காரணம், அவர்களை காந்தி கண்ட வீரப் பெண்ணாய், பாரதி கண்ட மாடர்ன் மங்கையாய் வலம் வர வேண்டும் என்பதை சொல்லும் காட்சி ஒன்றே போதும் தலைவா, தாய்மார்கள் நிச்சயம் போற்றிப் பாராட்டி குடும்பத்துடன் பார்த்து ரசிக்கப் போகிறார்கள். சூரியின் காமெடி எனும் சில மொக்கைகள் படத்தின் திருஷ்டிப் பொட்டு. சரி எல்லாமே அழகாய் அமைந்துவிட்டால் எப்படி?

                               மொத்தத்தில் வேதாளம் சிறார் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிக்கும்படி அமைந்து விட்டதில் உங்கள் இரசிகனாய் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 'ஓபனிங் கிங்' என்ற பட்டத்தை இந்த முறையும் தக்க வைத்துக் கொண்டீர்கள். இம்முறை திரையுலக ஜாம்பவான் கமல் அவர்கள் படத்துடன் போட்டியிட்டும் சற்றும் தளர்வடையாத இந்த வேதாளம் பாக்ஸ் ஆபிஸ் என்ற முருங்கை மரத்தில் அசால்ட்டாக ஏறி நிற்பதை பெருமையுடன் பார்த்து இரசிக்கிறேன்.

                        - ஒரு நிறைவான திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியுடன்,
                                                             கோவை ஆவி.


பின்குறிப்பு:

                              தல, வேதாளத்தை பொறுத்தவரை அது சூப்பர் ஹிட் என்பது உறுதியாகிவிட்டது. படமும் சிறப்பாக இருந்த போதும் என்ற போதும் இந்த "மாஸ்" என்னும் முகமுடியை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு, வாலி, முகவரி போல் ஒரு சில மாறுபட்ட கதையம்சமுள்ள படங்களை உங்களிடமிருந்து  எதிர்பார்க்கிறோம். கலைஞானி நடித்த  வறுமையின் நிறம் சிகப்பு போல ஒரு சீரியஸ் சப்ஜெக்டில் நடிக்கலாம் தலைவரே..இந்தப் படங்கள்  மூன்று அல்லது நான்கு  வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓடலாம். ஆனால் பொங்கலுக்கு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட்டபின் எல்லோரும் மறந்து விடுவார்கள். So ஆலுமா டோலுமா Change your ஸ்டைலு மா!!
                     

     

5 comments:

  1. பின்குறிப்பு : வீண் பயம் தேவையில்லை ஆவி...! (படம் : டப்பா...!)

    ReplyDelete
  2. தல் டக்கருன்னுதான் சொல்றாங்க...
    விமர்சனம் அருமை.

    ReplyDelete
  3. பின் குறிப்பை தல பின்பற்றினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete